இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் விஷால் பேசுகையில்: தமிழில் மருது என்ற பெயரிலும், தெலுங்கில் ராயுடு என்ற பெயரிலும் மே20ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
நான் நடித்த சண்டக்கோழி படம் இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள். அதேபோல இந்த 'மருது'படம் என்னை நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தினை எனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் தந்துள்ளார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
'அவன் இவன்'படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம். ஒரு காமெடியனாக எல்லாருக்கும் நன்கு தெரிந்த சூரி இந்தப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். வில்லனாக நடித்துள்ள ஆர்கே சுரேஷ், வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பானதாக பேசப்படும்.
படத்திலேயே வெள்ளையான ஒரு கதாபாத்திரம் நடிகை ஸ்ரீதிவ்யா தான். நான் அவருடன் இணைந்து நடித்திருக்கும் முதல் படம். அருமையாக நடித்துள்ளார்.
கதாநாயகன் யாராக இருந்தாலும் இயக்குநர் முத்தையாவின் அடுத்தபடத்தினை கண்டிப்பாக எங்களது பட நிறுவனம்தான் தயாரிக்கும்.
திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல,எல்லா நடிகர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன். மே20 ஆம் தேதி மருது வெளியாகிறது. கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன். திருட்டுவிசிடி களைக் கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.
தனி ஒரு ஆளாக நீங்கள் மட்டும் முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறீர்கள், அரசாங்கம் கடுமையான சட்டமியற்றி இதனைத் தடுக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "அரசாங்கத்தின் சட்டம் நமக்கு உறுதுணையாகத்தான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்கள்தான் முன்வரவேண்டும். அனைவரும் ஒரு குழுவாக இணைந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்," என்றார்.