அங்கிருந்து அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "சபாஷ் நாயுடு' என்ற எங்கள் புதிய திரைப்பட படப்பிடிப்புக்கு நானும், எங்கள் திரைக்குழுவை சேர்ந்தவர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து சேர்ந்திருக்கிறோம். எங்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும் இந்த தயாரிப்பின் தொடக்க கட்டங்களே முழுவீச்சில் அமைந்துள்ளன.
திரைத்துறையின் ஏறத்தாழ அனைத்து திரைப்பட தயாரிப்புகளைப் போலவே இதன் தயாரிப்பிலும், அதிலும் குறிப்பாக இத்தனை பிரமாண்டமான நுட்பங்கள் நிறைந்த தயாரிப்பில், தவிர்க்கவே முடியாத முதல் கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம்.
ஆனால், மிகவும் திறமை வாய்ந்த புரிந்துணர்வுடன் துணை நிற்கும் நடிகர்-நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இத்திரைப்படத்துக்கு அமைந்துள்ளது, என் நற்பேறு என்றுமகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தொடர்ந்து அளித்து வரும் நல்லாதரவை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் மிகுந்த புரிந்துணர்வுடன் அவர்கள் எப்போதும் எங்கள் பயணம் இனிமையான ஒன்றாக அமையும் வகையில், ஆகச்சிறந்த உதவி நல்கியுள்ளனர்.
பொதுவாகவே, நம்பகத்தன்மை கொண்ட நேர்மையான தென்னிந்திய திரைப்பட படப்பிடிப்பு முயற்சிகளை அமெரிக்காவில் மேற்கொள்ளும் எவருக்குமே அவர்கள் ஆதரவாக இருந்துள்ளனர் என்பதை நான் தென்னிந்திய திரைத்துறை சார்பாகவே சொல்வதாக கொள்ளலாம். அவர்களது நேசம் மிகுந்த உதவிகளுக்கு நன்றி கூறி, திரைத்துறையினரின் இதுபோன்ற மேலும் பல முயற்சிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,'' என்று கூறியுள்ளார்.