நீண்ட நாட்களாக கிடப்பிலிருந்த படம் இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் இது.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம் ஒருவழியாக இன்று வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி புரசைவாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் லால்வானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள ‘இது நம்ம ஆளு' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை தயாரிக்க சி்ம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் எங்களிடம் ரூ. 1 கோடியே 9 லட்சத்தை கடனாகப் பெற்றிருந்தது. இந்த கடனை 36 சதவீத வட்டியுடன் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக திருப்பித் தருவதாகவும், வடஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை எங்களுக்கு தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென இப்படத்தை வேறு ஒரு நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘‘சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் ‘இது நம்ம ஆளு' படத்தை திரையிடக்கூடாது என வழக்குத்தொடர மனுதாரருக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எனவே மனுதாரரிடம் வாங்கிய கடனை பைசல் செய்யும் வரை இப்படத்தை வடஆற்காடு, தென் ஆற்காடு சினிமா விநியோக பகுதிகளான கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,'' என உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவு வெளியானாலும், படத்தை திட்டமிட்டபடி பிற ஏரியாக்களில் வெளியிட்டுள்ளது சிம்பு சினி ஆர்ட்ஸ். சென்னையிலும் படம் வெளியாகியுள்ளது.