நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தபோது, எனக்கு ரஜினி பிடிக்கும், ரஜினிதான் ரோல் மாடல் என்றும் ரஜினியைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்தேன் என்றும் கூறினார். இத்தனைக்கும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான காக்கிச் சட்டை என்ற பெயரில் நடித்தவர் சிவகார்த்திகேயன். இதனால் கமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் விளாசி தள்ளி கொண்டிருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையம் வந்தார். கமல்ஹாசனை வரவேற்க அவரது ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தொடர்ந்து சில மணி நேரம் கழித்து சிவகார்த்தியன் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அடிக்கப் பாய்ந்தனர்.இந்த தாக்குதலில் இருந்து தப்பித்து ஒருவழியாக வெளியேறினார் அவர்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் என்னவோ சிவகார்த்திகேயனுடன் பாதுகாவலர்களும் உடன் வந்தனர். அவர்கள் கமல் ரசிகர்களைத் தடுத்து சிவகார்த்திகேயனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. டுவிட்டரில் ரசிகர்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு எதிராக கமல் ரசிகர்களும், கமல் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களும் டுவிட்டரில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம், இது போன்ற செயல்களை கமல் ரசிகர்கள் தயவு செய்து செய்யாதீர்கள். அது நம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஏற்படும் அவமானமாகும். இந்த செயல்களை எங்கள் புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.