ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவரின் சாதனையை பிரதமர் உட்பட பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் ரஜினியும் சிந்துவைப் பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'சிந்து நான் உங்கள் ரசிகர் ஆகிவிட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.
ரஜினிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவர் தனது மகளின் ரசிகர் எனக் கூறியுள்ளதால் சிந்துவின் தாயார் விஜயா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நடிகர் ரஜினிகாந்த், சிந்துவை பாராட்டியதோடு 'நான் சிந்துவின் ரசிகராக மாறி விட்டேன்' என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அவர் எவ்வளவு பெரிய மனிதர். மிகப்பெரிய நடிகரான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் எனது மகளின் ரசிகர் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை படித்ததும் உண்மையிலேயே நெகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
இறுதிப்போட்டி முடிந்ததும் சிந்து என்னிடம் பேசினார். கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்தார். அவரிடம் ஆட்டத்தை பற்றி எதுவும் நான் பேசவில்லை. 'கவலைப்படாதே சிந்து. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். இதுவே பெரிய விஷயம். நீ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி எங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்து விட்டாய்' என்று கூறி தேற்றினேன். அதன் பிறகு அவர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
அவர் நாளை (திங்கட்கிழமை) தாயகம் திரும்புகிறார். மாநில அரசு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. அவர் வீட்டுக்கு வந்ததும் அவருக்கு பிடித்த மைசூர்பாகு, பிரியாணி உள்ளிட்டவை செய்து கொடுப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
சிந்துவின் தாயார் சென்னையில் 18 ஆண்டுகள் இருந்ததால், தமிழ் நன்கு தெரிந்தவர் ஆவார். சிந்துவிற்கும் ஒரு சில தமிழ் வார்த்தைகள் தெரியுமாம். மற்றவர்கள் தமிழில் பேசுவதையும் அவரால் புரிந்து கொள்ள இயலுமாம்.